மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன.
தீப்பற்றிய பிரிவில் இருந்து 7 குழந்தைகளை மருத்துவமனை ஊழியர்கள் மீட்டனர். அதற்கு மேலும் குழந்தைகளை மீட்க முடியாத அளவுக்கு தீ பரவியது.
பிறந்து சில நாட்கள் முதல் மூன்று மாதங்கள்வரை ஆன குழந்தைகள் இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையின் மற்ற பகுதிகளுக்கும் பரவாத வண்ணம் தீ அணைக்கப்பட்டது.
மாநிலத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள இந்த விபத்தின் தொடர்பில் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்தார்.
“பண்டாராவில் நிகழ்ந்த, இதயத்தை நொறுக்கும் துயரமான சம்பவத்தில், நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம்,” என்று இந்தச் சம்பவம் பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
இதேபோல் அதிபர் ராம்நாத் கோவிந்த் உட்பட பல்வேறு தலைவர்களும் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.