புதுடெல்லி: மத்திய அரசு பறவைக் காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், உத்தர பிரதேச மாநிலத்திலும் இக்காய்ச்சல் பரவியது உறுதியாகி உள்ளது.இதுவரை ஏழு மாநிலங்களில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உயிருள்ள கோழிகளை பிற மாநிலங்களில் இருந்து கொண்டு வர டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இம்முறை கேரளாவில் உள்ள கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது முதலில் கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹரியானா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவியது உறுதியானது.
கேரளாவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி, வான்கோழி, வாத்துகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பஞ்சாப் மாநிலம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதுடன், பிற மாநிலங்களில் இருந்து கோழிகளை தருவிக்க அம்மாநில அரசு தடைவிதித்துள்ளது.
டெல்லி அரசும் இதேபோன்ற தடையை விதித்துள்ளது. ஹரியானா மாநில அரசு கோழிகள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள பறவைகளை அழிக்க உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் நிலைமையை ஆய்வு செய்ய மத்திய அரசு சிறப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்பியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.