இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக இந்திய வீரர்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனரீதியாக தூற்றியது தெரிய வந்துள்ளது.
மூன்றாவது டெஸ்ட்டின் நான்காவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றபோது தங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனரீதியாக தூற்றி இழிவுபடுத்தியதாக நடுவரிடம் இந்திய வீரர் ரகானே முறையிட்டார்.
இந்திய வீரர் சிராஜ் தொடர்ந்து இரண்டு முறை வீசிய பந்தை ஆஸ்திரேலியாவின் கேமரன் கிரீன் சிக்சர் அடித்ததை அடுத்து ரசிகர்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்த சில ஆஸ்திரேலியர்கள் சிராஜைத் தூற்றும் வகையில் இனவாதக் கருத்துகளைத் தெரிவித்ததாக மைதான அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறையற்ற செயலைக் கண்டித்து சிராஜுடன் சேர்ந்து இந்திய வீரர்கள் அனைவரும் மைதானத்தின் நடுவில் கூடினர்.
இதனைத் தொடர்ந்து, ஆட்டம் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட, இந்திய வீரர்கள் செய்த புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.
இந்திய வீரர்களுக்கு எதிராக இனவாத தூற்றலில் ஈடுபட்ட ரசிகர்களை அடையாளம் கண்ட ஆஸ்திரேலிய போலிசார் அவர்களை அரங்கிலிருந்து வெளியேற்றினர். இதையடுத்து, ஆட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில், நடந்ததற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம் வருத்தம் தெரிவித்துக்கொண்டது. ரசிகர்களின் இழிசொற்களால் மனம் புண்பட்ட இந்திய வீரர்களிடம் அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
“இனவாத தாக்குதல்களுக்கு நாங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
“அவ்வாறு நடந்துகொள்வோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் இடமில்லை.
“இந்திய வீரர்கள் செய்துள்ள புகார் தொடர்பாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் விசாரணை நடத்துகிறது.
“தவறு செய்தோரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டதும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
“விளையாட்டரங்கிற்குள் வர அவர்களுக்குத் தடை விதிக்கப்படலாம். அத்துடன், போலிசிடமும் புகார் செய்யப்படலாம்,” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் மன்றம் நேற்று தெரிவித்தது.