மார்கழி மாத நடுங்கும் குளிரிலும் கொட்டும் மழையிலும் சாலையோரமாக படுத்துத் தூங்கி தனது மூன்றாம் நாள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக அவரது ஆளுநர் மாளிகை முன்பாக இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாகவும் புதுவை ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டு வருகிறார்.
எனவே, அவரைத் திரும்பப் பெறும்படி மத்திய அரசை வலியுறுத்தி, அம்மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் தொடர்ந்து மூன்றாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி-முதல்வர் நாராயணசாமி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் போராட்டக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "கிரண்பேடியை திரும்பப் பெறுங்கள் என்கிற கோரிக்கை பிரதமர் மோடியின் காதுகளை எட்டும் வரை இப்போராட்டம் நீடிக்கும்.
"கிரண்பேடியே திரும்பிப் போ; நரேந்திர மோடியே கிரண்பேடியை திரும்பப் பெறு; புதுச்சேரியை காப்போம்! மீட்போம் என்கிற முழக்கம் தொடர்ந்து ஒலிக்கும்," என்றார்.
இதற்கிடையே ஆளுநர் மாளிகைக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாளிகையைச் சுற்றி அதிரடிப்படை போலிசார் குவிக்கப்பட்டு சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. போராட்டப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் புதுவையில் அரசியல் பதற்றம் நீடித்து வருகிறது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் (நீலப் போர்வையுடன்) அமைச்சர்களும் இரவு நேரத்திலும் சாலையில் தூங்கி போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
தொண்டர்களுக்கு பானிபூரி, பூரி மசாலா, ஆம்லெட், அரை வேக்காட்டு முட்டையுடன் உணவு பரிமாறப்பட்டது.

