கேரள மாநிலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பறவைக் காய்ச்சல் மேலும் ஏழு மாநிலங்களில் பரவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் முரும்பா கிராமத்தில் 800 கோழி குஞ்சுகள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை மாவட்ட நிர்வாகம் தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தது. இதன் முடிவு நேற்று வெளியானது.
பறவைக் காய்ச்சலால் அவை உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது என்று பர்பானி மாவட்ட ஆட்சியர் தீபக் முக்லிகர் கூறியுள்ளார்.
இதனால் அந்த கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து கோழிப் பண்ணைகளில் உள்ள பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 10 கி.மீ. சுற்றளவில் கோழி விற்பனை மற்றும் கொள்முதலுக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே டெல்லியில் நேற்றும் தொடர்ந்து காகம் மற்றும் வாத்து ஆகிய பறவையினங்கள் உயிரிழந்து கிடந்துள்ளன. இவற்றில் சரிதா விகாரில் உள்ள மாவட்ட பூங்காவில் 24 காகங்கள் இறந்துள்ளன. அவை மண்ணில் குழி தோண்டி புதைக்கப்பட்டன.
துவாரகா பகுதியில் 14 காகங்களும் ஹஸ்த்சால் பூங்காவில் 16 காகங்களும் இறந்து கிடந்துள்ளன. டெல்லி வளர்ச்சிக் கழகத்தின் 15 பூங்காக்களில் ஞாயிறு மொத்தம் 91 காகங்கள், 27 வாத்துகள் உயிரிழந்து கிடந்தன.
இதனால் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது வரை 104 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. டெல்லியின் பசுமைப் பகுதியான சஞ்சய் லேக் எச்சரிக்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேவையான நடவடிக்கைகளை எடுக்க கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சஞ்சய் லேக் பகுதிக்கு வந்த அதிகாரிகள் மாதிரிகளைச் சேகரித்து சென்றுள்ளனர்.