அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண 14ஆம் தேதி அன்று தமிழகம் செல்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி.
பொங்கல் கொண்டாட்டத்தின்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த முறை கொரோனா பாதிப்புகள் இருப்பதால் பல கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கான ஏற்பாடுகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடந்து வருகின்றன.
போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிகவும் பிரபலமான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் அன்று நடைபெற உள்ளது. வழக்கமாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டைக் காண வெளிநாடுகளிலிருந்து பலர் வருகை புரிவார்கள்.
இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க 14 ஆம் தேதி தமிழகம் வரும் ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோ சிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஜனவரி 16ஆம் தேதி அன்று முதல்வர் கலந்துகொண்டு பார்வையிட உள்ள நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் காந்தி பார்வையிடுகிறார்.
தமிழகம் வரும் ராகுல் காந்தி வரும் 23ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரவுள்ளதாகவும் அவர் 23 முதல் 26ஆம் தேதிவரை கொங்கு மண்டலமான ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.