இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளை பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இவற்றில் கோவாக்சின் இந்தியாவே தயாரித்துள்ள தடுப்பூசியாகும். நாடு முழுதும் இம்மாதம் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்க உள்ள நிலையில் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை சென்று சேர்ந்துள்ள.
முன்னதாக தமிழகத்திற்கு ஐந்து லட்சத்து 36 ஆயிரத்து 500 ‘தடவை’ போடக்கூடிய கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் செவ்வாய்க் கிழமை சென்னை சென்றன. அங்கிருந்து தமிழகத்தில் உள்ள சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் 20,000 முறை போடக்கூடிய மருந்துகள் சென்னை சென்றன.
அவை, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
கோவாக்சின் தடுப்பூசி மருந்து மேலும் வேண்டியுள்ளதால் அதன்பின், மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
இதுவரை கோவிஷீல்ட், கோவாக்சின் என 5,56,500 முறை போடக்கூடிய மருந்துகள் சென்னை வந்து சேர்ந்துள்ளன. தடுப்பூசிகள் தயாரானதும் 16ஆம் தேதி போடும் பணி தொடங்கவிருக்கிறது.