மிரட்டுபவர்களுக்குப் பதவியா?: முதல்வர் எடியூரப்பா மீது 'எம்எல்ஏ'க்கள் அதிருப்தி
பெங்களூரு: கர்நாடகாவில் நேற்று மேலும் ஏழு பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் வஜூபாய் வாலா புதிய அமைச்சர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
எம்.எல்.ஏக்கள் உமேஷ் கட்டி, அங்கரா, முருகேஷ் நிரானி மற்றும் அரவிந்த் லிம்பவள்ளி ஆகியோரும், எம்.எல்.சிக்கள் சங்கர், எம்.டி.பி.நாகராஜ் மற்றும் யோகேஸ்வர் ஆகியோரும் நேற்று அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டது முதல் இதுவரையிலும் மூன்று முறை அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இப்போது மூன்றாவது முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொள்ளும் நிலையில் அதிருப்தியில் உள்ள பிற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடியூரப்பா மீதான தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது அமைச்சரவையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பெங்களூரு, பெலாகவி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல்வர் எடியூரப்பா மீது குறை கூறி வருகின்றனர்.
"தனக்கு மிரட்டலாக இருப்பவர்களின் வாயை அடைப்பதற்காக முதல்வர் எடியூரப்பா, தனது அமைச்சரவையில் அவர்களுக்குப் பதவி கொடுத்துள்ளார்," என்று விஜயபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டில் யாத்னல் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "கட்சிக்காக பாடுபட்டவர்களை முதல்வர் கண்டு கொள்ளாமல் தன்னை மிரட்டுபவர்களுக்கு இடம் கொடுத்துள்ளார். இனி, அவருக்குக் கீழ் ஒருபோதும் அமைச்சராக எனக்கு விருப்பமில்லை. இதுபோன்ற அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கை நீண்ட நாள் நீடிக்காது என்பது உறுதி. கர்நாடகாவில் நிச்சயம் புதிய சகாப்தம் பிறக்கப்போகிறது என்று பெங்களூரில் நடந்த செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திரு பசனகவுடா கூறியுள்ளார்.

