இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 4,319 சுகாதாரப் பணியாளர்களில் 52 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
நேற்று அங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 51 பேருக்கு லேசான பக்க விளைவுகள் இருந்ததாகவும் ஒருவருக்கு மட்டும் சற்று கடுமையான விளைவு இருந்ததாகவும் கூறப்பட்டது.
அந்த நபர் மருத்துவமனையில் 2 மணி நேரம் சிகிச்சை பெற்றார். அவருக்கு ஊசி போட்ட இடத்தில் வலியும் காய்ச்சல், வாந்தியும் இருந்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கிய போதும் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை.
தடுப்பூசி போடும் பணி தொடங்கிய முதல் நாளில் 16,600 பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், 2,783 சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
மாநிலத்தின் தலைசிறந்த மருத்துவர்களும் இதர பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்து மற்றவர்களுக்கு ஊக்கமூட்டினர். இருந்தாலும் முதல் நாளன்று ஊசி போட்டுக்கொண்டவர்களின் அளவு 16.8 விழுக்காடுதான் என்று தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலி, திருச்சியில் முதல் நாளன்று ஒருவர் கூட ஊசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்னையில்தான் முதல் நாளன்று ஆக அதிகமாக 310 பேர் கோவிஷீல்டு ஊசியைப் போட்டுக்கொண்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இருவர் மட்டுமே அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள முன்வந்தனர்.
சுகாதாரத்துறையின் புள்ளிவிவரங்களைப் பார்க்கையில், கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்துக்குத் தமிழ்நாட்டில் தொடக்க ஆதரவு குறைவாகவே இருக்கிறது என்பது தெரியவருகிறது.