பிரசவத்துக்குப் பிறகு தனது குழந்தையை ஒப்படைக்கவில்லை என நெல்லூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது ஒரு பெண்மணி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில் அப்பெண்மணி கர்ப்பம் தரிக்கவே இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சசிகலா என்ற பெண்மணி கடந்த 5ஆம் தேதி அரசு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஜனவரி 16ஆம் தேதி பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்ததாக அவர் கூறுகிறார்.
அதன்படி கடந்த 16ஆம் தேதி மருத்துவமனைக்குச் சென்ற தமக்கு சில பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பது தமக்குத் தெரியவில்லை என்று கூறும் சசிகலா, தமக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் பிறந்த குழந்தையைத் தம்மிடம் ஒப்படைக்கவில்லை என புகார் எழுப்பியுள்ளார். ஆனால் சசிகலா தாய்மை அடையவில்லை என மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமக்கு வளைகாப்பு நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான அறிக்கைகள் ஆகியவற்றை போலிசிடம் ஒப்படைத்துள்ளார் சசிகலா.
அவர் உண்மையாகவே தாய்மை அடைந்தாரா என வேறொரு மருத்துவரை வைத்து போலிசார் உறுதி செய்ய உள்ளனர்.

