புதுடெல்லி: நாடு முழுவதும் 27 நகரங்களில் 1,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகவலை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டம் - 2, சூரத் மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றுக்கான பூமி பூசை கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, ஒரு காலகட்டத்தில் நாட்டில் மெட்ரோ ரயில் குறித்த நவீன சிந்தனையும் கொள்கையும் அறவே இல்லை எனக் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நாட்டின் பல்வேறு நகரங்களில் பலவிதமான மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிமுகமாகி இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், அத்தகைய திட்டங்களில் சீரான தன்மை இல்லை என்றும் பிற போக்குவரத்து முறைகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
தற்போது பேருந்து, ரயில் போன்ற பிற போக்குவரத்துகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்டுவரப்பட்டு மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த கால ஆட்சியில் சுமார் 12 ஆண்டுகளில் 225 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டதாக தெரிவித்த அவர், 2014ல் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் 450 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நாடு முழுவதும் தற்போது 27 நகரங்களில் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது என்றும், இதன் மூலம் நாட்டின் இரண்டு முக்கிய வணிக மையங்களின் இணைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
“அனைத்து வகை போக்குவரத்துக்கும் ஒரே அட்டையைப் பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் வரையறுக்கப்பட்டு வருகிறது. நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்தியா முழு நம்பிக்கையுடன் முடிவுகளை எடுத்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறது,” என்றார் பிரதமர் மோடி.