ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. இதையடுத்து சொந்த ஊர் திரும்பிய தமிழக வீரர் நடராஜனுக்கு ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சேலத்தைச் சேர்ந்த நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.
வெற்றிக்கிண்ணத்துடன் நாடு திரும்பியது இந்திய அணி. இந்நிலையில் நடராஜனும் நேற்று முன்தினம் சொந்த ஊரான சின்னப்பம்பட்டி கிராமத்தை வந்தடைந்தார். அவருக்காக சாரட்டு வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர் தன் வீட்டைச் சென்றடையும் வரை வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கானோர் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். அப்போது ஊர் மக்கள் மத்தியில் அவர் சிறிது நேரம் பேசினார்.
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியிருப்பதால் அவர் தன்னை இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.