புதுடெல்லி: விவசாய சங்கங்கள் நாளை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ள பேரணியில் சுமார் இரண்டு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கத் தயாராக இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியின் ஐந்து எல்லைப் பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் அம்மாநிலத்தின் மையப்பகுதிக்குள் செல்ல தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புது வேளாண் சட்டங்களை விவசாயிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அச்சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த இரு மாதங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசுக்கும் விவசாயக் குழுக்களுக்கும் இடையேயான 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
மூன்று புதுச் சட்டங்களை ஒன்றரை ஆண்டு காலம் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதையும் ஏற்காத விவசாயிகள் தரப்பு நாளை டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
எனினும் குடியரசு தினத்தன்று பேரணி நடத்த முதலில் அனுமதி மறுத்த டெல்லி காவல்துறை, தற்போது சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருப்பதாக விவசாயிகள் தரப்பு தெரிவிக்கிறது.
குடியரசு தின அணிவகுப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக விவசாயக் குழுக்கள் டெல்லி போலிசாருடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பேரணி எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்றும் எவ்வளவு தூரம் பேரணியை நீட்டிப்பது என்றும் விவாதித்து முடிவெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயக் குழுக்களின் தலைவர்கள், டிராக்டர் பேரணி அதிகபட்சமாக சுமார் 72 மணி நேரம் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.
பேரணியை ஒழுங்குபடுத்தவும் தேவையான உதவிகளைச் செய்யவும் 2,500 தன்னார்வலர்கள் பணியாற்ற உள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், பேரணியை வழிநடத்த கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்படும் என்றும் கூறினர்.
பேரணி முடிந்த பிறகும் விவசாயிகளின் அமைதிப் போராட்டம் நீடிக்கும் என்றும் விவசாயக் குழுக்கள் அறிவித்துள்ளன.

