கொவிட்-19 முடக்கநிலை காரணமாக உலக நாடுகளின் பொருளியல் அடிமட்டத்துக்கு சரிந்துள்ளது.
இதிலிருந்து மீண்டு வர பல நாடுகள் பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் இந்தியாவின் பணக்காரர்களைப் பொறுத்தவரை தலை கீழாக உள்ளது.
கொவிட்-19 முடக்கக் காலத்தில் இந்திய செல்வந்தர்களின் வருமானம் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. அதாவது பணக்காரர்கள் மேலும் பெரும் பணக்காரர்களாக ஆகி உள்ளனர்.
லாப நோக்கற்ற ‘ஆக்ஸ்பாம்’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இதனை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் முதல் 100 இடங்களில் உள்ள கோடீஸ்வரர்களின் வருமானம் மேலும் 35% அதிகரித்தது என்று அறிக்கை குறிப்பிட்டது.
‘சமநிலையற்ற கிருமி’ என்று தலைப்பில் வெளியான அறிக்கை, செல்வந்தர்களை மேலும் செல்வந்தர்களாக மாற்றிய அதே கால கட்டத்தில் 84% குடும்பத்தினர் வருமானத்தை இழந்தனர்.
ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 1.7 லட்சம் பேர் வேலைகளை இழந்தனர்.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு வருமான இடைவெளி அதிகரித்துள்ளது.
மேலும், கிருமித்தொற்று காலத்தில் ஒவ்வொரு கோடீஸ்வரரும் கூடுதலாக ஈட்டிய வருமானத்தைக் கொண்டு 138 மில்லியன் ஏழை மக்களுக்கு தலா 94,045 ரூபாய் வழங்க முடியும்.
கிருமித்தொற்று காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஒரு மணி நேரத்தில் செய்ததை சாதாரணமானவர்கள் செய்ய 10,000 ஆண்டுகள் ஆகும்,“ என்று அறிக்கை தெரிவித்தது.
கடந்த ஆகஸ்டு மாதம் உலகின் நான்காவது பணக்காரராக அம்பானி அறிவிக்கப்பட்டார்.