இந்தியாவில் குடியரசு தினத்தை முன்னிட்டு பொதுவாழ்வு, கலை, சமூகச் சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ என்ற மூன்று பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மறைந்த அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய், மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த சாலமன் பாப்பையா, அனிதா, சுப்பு ஆறுமுகம், ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்ட 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயியான 103 வயது பாப்பம்மாளுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் பத்ம விருதுகளுக்குத் தேர்வாகியுள்ளனர்.
மொத்தமாக ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பத்ம விருதுகள் வென்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.