சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா இன்று அதிகாரபூர்வமாக விடுதலை செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து விடுதலை ஆனதற்கான உத்தரவு மருத்துவமனையில் சசிகலாவிடம் வழங்கப்பட்டது.
கடந்த வாரத்தில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் பெங்களூரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்புகள் முற்றிலுமாக நீங்கிவிட்ட நிலையில், சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிறைவாசம் முடிந்தாலும் சசிகலா விக்டோரியா அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார். சசிகலா சிகிச்சை பெறும் மருத்துவமனையில் டிடிவி தினகரன், வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் உடன் இருக்கின்றனர்.
சசிகலாவின் ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே குவிந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த போலிசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.