ஐநா: இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி ஆற்றல் உலகின் தலைசிறந்த வளம்

ஐநா: இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி ஆற்றல் உலகின் தலைசிறந்த வளம்

2 mins read
acd127fd-3181-448b-8f07-f2809809f17f
-

இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி உற்பத்தித் திறனானது உலகின் தலைசிறந்த வளம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியுள்ளார்.

நியூயார்க்கின் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், "இந்தியாவில் தடுப்பூசிகர் உற்பத்தி மிக அதிக அளவில் உள்ளது. உலகளாவிய தடுப்பூசி பிரசாரத்தைச் சாத்தியமாக்குவதில் முக்கிய பங்கை வகிக்கத் தேவையான அனைத்தும் இந்தியாவிடம் உள்ளதென உறுதியாக நம்புகிறோம். இந்தியாவின் இந்த திறன் முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை உலகம் புரிந்துகொள்கிறது," எனக் கூறினார்.

கொவிஷீல்டு, கோவெக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியத் தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் சென்ற மாதம் ஒப்புதல் வழங்கியது. தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மொத்தம் 2,928,053 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுவரையில் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை அண்டை நாடுகளுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

ஓமான், கேரிகாம் நாடுகள், நிகரகுவா, பசிபிக் தீவு நாடுகளுக்கு தடுப்பூசி மருந்துகளை பரிசளிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இன்று கூறினார். மேலும், தடுப்பூசிகள், நோய்த்தடுப்புக்கான உலகளாவிய கூட்டணியான கவி அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஆப்பிரிக்காவிற்கு 10 மில்லியன், ஐநா சுகாதார ஊழியர்களுக்கு ஒரு மில்லியன் தடுப்பூசி மருந்துகளையும் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே இந்தியாவில் புதிதாக 18,855 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனோடு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,720,048 ஆகியுள்ளது.

அதேநேரத்தில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 10,394,352 ஆகக் கூடியுள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.