இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
அதிபர் ராம்நாத் கோவிந்த் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கிவைத்தார்.
மத்திய அரசின் பல்வேறு சாதனைகளையும் பட்டியலிட்ட அவர், கொவிட்-19 சிரமமான சூழலிலும் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருவதாகத் தெரிவித்தார்.
மத்திய அரசாங்கம் நிறைவேற்றி இருக்கும் வேளாண் மசோதாக்களை மத்திய அரசு மீட்டுக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதிபர் உரையை அடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 நிதி ஆண்டுக்கான பொருளியல் ஆய்வறிக்கையை மக்களவை யில் தாக்கல் செய்தார்.
இந்தியாவின் புதிய வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது.
அதற்கு முன்னதாக மன்றத்தில் தாக்கலான பொருளியல் ஆய்வறிக்கை, நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பொருளியல் 7.7 விழுக்காடு சுருங்கும் என்றும் அடுத்த நிதி ஆண்டில் 11 விழுக்காடு வரை பொருளியல் வளர்ச்சிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கோடிகாட்டுகிறது.
இதனிடையே, மத்திய அரசாங்கம் நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்களை எதிர்த்து இரண்டு மாத காலமாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரை 18க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவிட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வேளையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதற்கு முன்னதாக மன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வரும் 10 ஆண்டுகள் இந்திய வளர்ச்சிக்கு உயிர்நாடியானவை என்று தெரிவித்தார்.
ஆகையால் அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து விவாதங்களும் அமைய வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஆக்ககரமான முறையில் நடத்தி ஒத்துழைப்பு தரும்படி அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் கோரிக்கை விடுத்தார்.
நடப்புக் கூட்டத்தொடர் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடக்கும்.
அதன்பின் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை 2வது அமர்வு நடக்கும் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

