டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விஷால் தாக்கரே உள்ளிட்ட மூன்று வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில் டெல்லி போலிசார் மீது மனிதநேயமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
டிராக்டர் பேரணிக்குள் புகுந்த சில குண்டர்கள் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்து செயல்பட்டுள்ளதாகவும், சுயசார்பு விசாரணையின் மூலம்தான் இந்த வன்முறைச் சம்பவம் குறித்த உண்மைகள் வெளிவரும் என்றும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டர்கள் அடையாளம் காணப்பட்டு, வன்முறைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நீதித்துறை நலனுக்காக இந்நடவடிக்கை தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களில் 300க்கும் அதிகமான போலிசார், விவசாயிகள் காயம் அடைந்தனர். இதையடுத்து விவசாயக் குழுக்களுக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள உறுதிமொழியில் எந்தவித மாற்றமும் இல்லையென பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
வேளாண் அமைச்சர் வழங்கிய திட்ட முன்மொழிவு இப்போதும் நீடிப்பதாக டெல்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சினையை மத்திய அரசு திறந்த மனதுடன் அணுகுவதாகவும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல வேளாண் அமைச்சருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதுமென்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதி இருதரப்புக்கும் இடையே 12ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

