நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடையூறின்றி நடக்க நடவடிக்கை
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி டெல்லிக்குள் விவசாயிகள் ஊடுருவ முடியாதபடி நேற்று பரவலாக தடுப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
துணை ராணுவப் படையினரும் டெல்லி போலிசாரும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குடியரசு தினத்தன்று போராட்டக்காரர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்ததுடன் வன்முறையிலும் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்வதைத் தவிர்க்கவே தடுப்பரண்கள் அமைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
டெல்லியின் சில பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் இணையச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் போலிசார் குவிக்கப்பட்டிருந்தனர். புறநகர்ப் பகுதிகளில் துணை ராணுவப் படையினர் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதற்கிடையே டெல்லியில் டிராக்டர் பேரணி முடிந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என விவசாயக் குழுக்கள் தெரிவித்துள்ளன. மாயமானவர்களின் நிலை குறித்து கண்டறிய ஒன்பது பேர் கொண்ட சிறப்புக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதில் போலிசார் தீவிரமாக உள்ளனர். செங்கோட்டையில் அத்துமீறி நுழைந்த ஐந்து பேர் அடையாளம் கண்டிருப்பதாகவும் அவர்களை விசாரிக்க இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குடியரசு தினத்தன்று வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததால் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் போது அவைக்கு வெளியே போராட்டங்களும் வன்முறையும் நிகழ்வதை மத்திய அரசு விரும்பவில்லை,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் அதிகம் கூடும் பகுதிகளை டெல்லி போலிசார் ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் கண்காணித்து, நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் நடக்கும் போராட்டத்துக்குப் பண உதவி செய்பவர்கள் யார் என்பது குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.