போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாக கிருமிநாசினியை ஊற்றிய சுகாதாரப் பணியாளர்களால் 12 குழந்தைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஜனவரி 31ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நாளில் சொட்டு மருந்து பெறத் தவறிய குழந்தைகளுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் அடுத்த சில நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும்.
அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலம், யாவத்மால் மாவட்டம், கப்ஸிகோப்ரி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று குழந்தைகளுக்குப் போலியா சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
ஆனால், அங்கு பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு பதிலாக கைகளைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை வழங்கியுள்ளனர்.
கிருமிநாசினி வழங்கப்பட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தைகளின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கெனவே 15 நாட்கள் பயிற்சி அளித்த பிறகுதான் அந்த ஆஷா பணியாளர்கள் சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று குறிப்பிட்ட அதிகாரிகள், நடைமுறைகள் சரியாகப் பயன்படுத்தாத மூன்று சுகாதாரப் பணியாளர்களையும் பணி நீக்கம் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.