புதுடெல்லி: விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதை தடுப்பதற்காக சாலைகளில் இரும்பு ஆணிகளை பதித்து தடுப்பரண் அமைத்துள்ளது டெல்லி காவல்துறை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் முகாமிட்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த குடியரசு தினத்தன்று நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. அப்போது ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து டெல்லியில் பல்வேறு பகுதிகளில் போலிசார் தடுப்பரண்கள் அமைத்துள்ளனர். குறிப்பாக டெல்லி நகருக்குள் நுழைய விவசாயிகள் பயன்படுத்தும் ஐந்து எல்லைப் பகுதிகளில் துணை ராணுவப் படையைக் குவித்து கான்கிரீட்டால் ஆன தடுப்புச்சுவர்களை அமைத்துள்ளது டெல்லி காவல்துறை.
மேலும் இரண்டடுக்கு இரும்புத் தடுப்புகளை அமைத்துள்ள போலிசார், இரும்பு ஆணிகளையும் சாலைகளில் பதித்துள்ளனர். இந்த தடுப்பரண்களைக் கடந்து டெல்லி நகருக்குள் நுழைவது விவசாயிகளுக்கு மிகக் கடினமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாலைகளில் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே டிராக்டர் பேரணியில் பங்கேற்ற ஏராளமான இளையர்கள் மாயமாகி உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி முறையிட்டார்.
அவரும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் இருவரும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். அப்போது டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளையர்கள் பலர் போலிசாரால் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
பஞ்சாப் இளையர்கள் அதிகளவில் கைதாகி இருப்பதாகவும் அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் மணீஷ் திவாரி சுட்டிக்காட்டினார்.
இளையர்கள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை என்று பஞ்சாப் அமைச்சர்கள் கூறியதை கேட்டுக்கொண்ட அமித்ஷா, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே, வரும் 6ஆம் தேதி நாடு தழுவிய அளவில் மூன்று மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என விவசாய குழுக்கள் அறிவித்துள்ளன. இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவை கேட்டுக் கொண்டுள்ளன.

