மும்பை: பத்து மாதங்களுக்குப் பிறகு மும்பை மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த ரயில்களில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் நடவடிக்கைகளில் ஒன்றாக மும்பை மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி நிறுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 15ஆம் தேதி, மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டு அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
பின்னர் வழக்கறிஞர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்டோர் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பொதுமக்களும் பயணம் செய்யலாம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பொதுமக்கள் பயணம் செய்ய முடியும் என்றும் கொரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அரசு நெறிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.