குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடிக்குப் பதில் வேறு கொடியை ஏற்றியவர்கள் தொடர்பாக தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் வெகுமதி தரப்படும் என டெல்லி போலிஸ் அறிவித்து உள்ளது.
அன்றைய தினம் நிகழ்ந்த வன்முறையில் ஈடுபட்டதாக எட்டுப் பேரின் பெயர்களை போலிஸ் அறிவித்து உள்ளது. அவர்களில் முக்கியமானவர்களான தீப் சித்து, ஜக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜாந்த் சிங் ஆகியோர் பற்றிய தகவல் தந்தால் இந்த வெகுமதி அளிக்கப்படும்.
மேலும் நால்வர்களான ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோரைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்போருக்கு 50,000 ரூபாய் வெகுமதி தரப்படும் என்றும் டெல்லி போலிஸ் அறிவித்துள்ளது.
விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறையில் ஈடுபட்டவர்களை பட்டியலிட்டு உள்ள போலிசார் டெல்லியிலும் பஞ்சாப்பிலும் அவர்களைத் தேடி வருகின்றனர். வன்முறை தொடர்பாக 44 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டு உள்ளது. விவசாய சங்கத்தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட சிலர் மீதும் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் இதுவரை 122 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இவர்களில் 80 வயது முதியவர் ஒருவரும் அடங்குவார். அவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். குடியரசு தினத்தன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் டிராக்டர் பேரணி நடத்தின. அப்போது போராட்டக்காரர்களில் ஒருபிரிவினர் அனுமதிக்கப்பட்ட பாதையை மீறி செங்கோட்டைக்குள் புகுந்து தேசிய
கொடியை இறக்கி சீக்கிய கொடியை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து டெல்லி போலிசார் லத்தி சார்ஜ் நடத்தியும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறையில் ஈடுபட்ட வர்கள் நடத்திய தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட போலிசார் காயமுற்றனர்.
இந்நிலையில், உலோக லத்தி மற்றும் மிகப் பெரிய தடுப்புக் கவசத்துடன் போலிசார் பாதுகாப்புடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது குறித்து கூறிய டெல்லி போலிஸ், “உலோகத்திலான லத்தியைப் பயன்படுத்த போலிசாருக்கு எந்த அனுமதியும் தரப்படவில்லை. இது குறித்து உலோக லத்தி வழங்கியது யார் என விளக்கம் கேட்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளது.