பனிப்பாறை உடைந்ததால் பெரும் வெள்ளப்பெருக்கும் சேதங்களும் ஏற்பட சுற்றுச்சூழல் நிபுணர்கள் முன்பே விடுத்த எச்சரிக்கைகளை புறக்கணித்ததே காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது உடைந்த பனிப்பாறை குறித்து நிபுணர்கள் முன்கூட்டியே தெரிவித்த கருத்துகளை ஏன் சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலிக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பனிப்பாறைகள் உடைந்து நொறுங்கும்போது அதனால் பெருமளவு பாதிக்கப்படும் பகுதிகளில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாக இருந்தது.
அப்படிப்பட்ட ஓரிடத்தில் அணை கட்டுவதையும் மின் திட்டத்தைச் செயல்படுத்துவதையும் தாம் விரும்பவில்லை என்கிறார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான உமா பாரதி.
இவர் முன்பு பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நீர் வளம், ஆறு மேலாண்மை, கங்கை புத்தாக்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.
நிபுணர்கள் சுட்டிக்காட்டிய ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில்தான் இப்பெரும் துயரம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இமயமலைப் பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால் தாம் அதிகாரிகளை முன்பே எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.
பனிப்பாறை உடைந்து நொறுங்கும் எனும் பேராபத்து நிலவி வந்த நிலையில் ரிஷிகங்கா பகுதியில் மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது ஏன் என்பது தமக்கு இதுவரை புரியவில்லை என சுற்றுச்சூழல் நிபுணரான அனில் ஜோஷி கூறியுள்ளார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அணை மற்றும் மின்திட்ட கட்டுமானம் ஆகியவை உடைந்து நொறுங்கிய கங்காதேவி பனிப்பாறையில் இருந்து சில மைல்கள் தூரத்திலேயே இருந்ததாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
"அனைத்துலக அளவில் ஏற்படும் பருவநிலை மாற்றமே பனிப்பாறைகள் உடையக் காரணம். அதனால்தான் குளிர்காலத்தில் கூட இவ்வாறு ஏற்பட்டுள்ளது. எனினும் பனிப்பாறைக்கு அருகே திட்டங்களைச் செயல்படுத்த நினைத்ததன் பின்னணியைப் புரிந்துகொள்ள முடியவில்லை," என்கிறார் அனில் ஜோஷி.
இதற்கிடையே, குளிர்காலங்களில் பனிப்பாறைகள் இறுகி உறைந்து காணப்படுவதுதான் வழக்கம் என்கிறார் மூத்த விஞ்ஞானி மணீஷ் மேத்தா.
"பனிப்பாறைகளின் சுவர்கள் ஒன்றோடு ஒன்று இறுகி கடினமாக இருக்கும். பாறைகள் உருக வாய்ப்பே இல்லை. வழக்கமாக இந்த காலங்களில் பனிப்புயல் அல்லது நிலச்சரிவு காரணமாகத்தான் பனிப்பாறைகள் உடையும். ஆனால் இந்த பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டு உடைந்தது வித்தியாசமாக உள்ளது," என்கிறார் மணீஷ் மேத்தா.
ரிஷிகங்கா ஆற்றின் குறுக்கே 13.2 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கட்டப்பட்டு வந்த ரிஷிகங்கா மின்திட்டம் (தபோவன் அணை) முழுமையாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
இந்த மின்திட்டத்தில் பணியாற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தோ-திபெத் எல்லை படை குழுவினர் இரவிலும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நிகழ்ந்து நீண்ட நேரமாகிவிட்டதால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

