கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 676,000 பேர் தங்களுடைய இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர்.
வெளிநாட்டு குடியுரிமையைப் பெறுவதற்கு இந்தியக் குடியுரிமையைக் கைவிடுவது அவசியம். அப்படி சுமார் 676,000 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளனர்.
இந்திய அரசு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் எத்தனை பேர் இந்தியக் குடியுரிமையை கைவிட்டனர் என்று சென்ற திங்கட் கிழமை அன்று மக்களவையில் கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் “2015ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் வசித்தவர்களில் 676,000 பேர் இந்திய குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர்” என்றார்.
2015ல் 144,942 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டு வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றனர். 2018ல் 136,441 பேர் இந்தியக் குடியுரிமையை கைவிட்டுள்ளனர்,” என்று அமைச்சர் ராய் சொன்னார்.
வெளியுறவு அமைச்சின் தகவலின்படி 12,499,395 இந்தியர்கள் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஓசிஐ’ எனும் வெளிநாட்டு இந்திய குடிமகன் அட்டை கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்று உறுப்பினர் கேள்வி கேட்டார். இதற்குப் பதில் கூறிய திரு ராய், 2020ல் 191,609 பேர் ‘ஓசிஐ’யைப் பெற்றுள்ளனர் என்றார்.
2005க்கும் 2020க்கும் இடையே மொத்தம் 3,699,476 பேருக்கு ‘ஓசிஐ’ வழங்கப்பட்டுள்ளது.