மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் உறவினரை தனது தோளில் சுமந்தபடி மூன்று கிலோமீட்டர் நடக்க வற்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் வெளியாகி பரவி வருகிறது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குணா என்னும் மாவட்டத்தில் வசித்து வந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்தப் பகுதி மக்களே பேசி தம்பதியரின் சம்மதத்துடன் பிரித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண் தனக்குப் பிடித்த மற்றொரு ஆணுடன், இன்னொரு கிராமத்தில் வாழத் தொடங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், அவரது முன்னாள் கணவரும், கணவரின் உறவினர்களும் வந்து அவரைச் சித்ரவதைக்குள்ளாக்கியதாகவும் முன்னாள் கணவரின் உறவினர் ஒருவரை தோளில் தூக்கியபடி நடந்து செல்லுமாறு மிரட்டியும் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
ஓர் ஆடவரைத் தோளில் சுமந்தபடி அந்தப் பெண்ணை நடக்க வைத்து, அவரது முன்னாள் கணவரின் உறவினர்கள் கைகளில் மட்டையுடன் மிரட்டியபடியும், நடனமாடியபடியும் பின் தொடர்ந்து செல்லும் காட்சிகள் காணொளியில் பதிவாகியுள்ளன.