கொரோனா கிருமித்தொற்றுப் பிடியில் இருந்து விடுபட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தியா தனது எல்லைகளைத் திறக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்காக எல்லைகளைத் திறப்பது தொடர்பில் அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.
கொரோனா விவகாரம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிநாட்டவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது இந்தியா. எனினும் பின்னர் குறிப்பிட்ட விசாக்களின் அடிப்படையில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், மிக விரைவில் சுற்றுலாப் பயணிகளுக்காக எல்லைகள் திறக்கப்படும் என்ற தகவல் சுற்றுலாத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
இதனிடையே அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் சுற்றுலாத்துறை கொரோனா விவகாரத்துக்கு முந்தைய நிலையை எட்டிப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய சுற்றுலா சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் நகுல் ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது வழக்கத்தைவிட குறைவான அளவிலேயே சுற்றுலா சார்ந்த பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
“கோவா, கேரளா, ராஜஸ்தான் போன்ற முக்கிய சுற்றுலாத்தலங்களில் 70% தங்கும் விடுதி அறைகள் முன்பதிவாகி உள்ளன.
“உள்நாட்டுப் பயணிகள் அதிகளவில் பயணம் மேற்கொள்வதால் இது சாத்தியமாகி உள்ளது. நகர்ப்புற தங்கும் விடுதிகளில் அதிகபட்சமாக 35 விழுக்காடு அறைகள் நிரம்பியுள்ளன. ஒட்டுமொத்தத்தில் 50 விழுக்காடு அறைகள் நிரம்பிஉள்ளன,” என்று நகுல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.