விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தரப்புக்கும் இடையேயான அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என்ற கேள்விக்குப் பதிலளிக்க மறுத்தார்.
“பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசும்போது மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் பிரிவு வாரியாக விவாதிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.
“இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களுடன் ஒவ்வொரு பிரிவாக விவாதிப்பதற்கு அரசு தயாராகவே இருக்கிறது,” என்றார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
இதற்கிடையே, பல நாட்களாக நீடித்து வரும் போராட்டத்தின் அடுத்த கட்டமாக மேற்கு வங்க மாநிலம் நோக்கி டிராக்டரில் செல்வதுதான் தங்களது திட்டம் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 86ஆவது நாளாக நேற்றும் நீடித்தது.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகள் வீடு திரும்பமாட்டார்கள் என இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் போராட்டத்தின் மூலமாக நாட்டின் அரசியல் சூழலை மாற்றுவோம். மேற்கு வங்க மாநிலத்தில் இதை அடுத்த ஒரு மாதத்தில் செய்து காட்டுவோம்.
“இதற்காக மேற்கு வங்கம் நோக்கி டிராக்டரில் செல்வதுதான் எங்களுடைய அடுத்த திட்டம். அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மத்திய அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பிரச்சினைகளில் இருந்து போராடி மீட்பது எங்கள் பொறுப்பு,” என்று ராகேஷ் திகைத் கூறியுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் பயிர்களைத் தீயிட்டுக்கொளுத்தவும் தயார் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் நுழைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். அரசியல் சார்பு கூடாது எனவும் வலியுறுத்தி உள்ளனர்.