மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது எப்படி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து அமித் ஷா தன் மகனைக் காப்பாற்ற முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தாம் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாக விமர்சிக்கப்படுவதை ஏற்க இயலாது என்றும் மம்தா கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அங்கு அரசியல் கட்சிகள் இடையேயான வார்த்தைப்போர் வலுத்து வருகிறது.
தனது சகோதரர் மகனை மம்தா அரசியல் களத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும் வாரிசு அரசியலை ஊக்குவிப்பதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
இந்நிலையில், அமித் ஷாவை கடுமையாக தாக்கியுள்ளார் முதல்வர் மம்தா.
"அமித் ஷா தன் மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைத்துவிட்டு மற்றவர்களை குற்றம் சாட்டுகிறார். இந்த நிலை நீடிக்கக் கூடாது. பணமே இல்லாத நிலையில் இருந்த ஒருவரால் எப்படி கோடிக்கணக்கில் சேர்க்க முடிந்தது? அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா எப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக முடிந்தது?
"இப்படியோர் உயர் பதவியை அடைவதற்கு அவர் அப்படி என்ன செய்துவிட்டார்? அவரிடம் என்ன தகுதிகள் உள்ளன?" என்று முதல்வர் மம்தா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

