மகாராஷ்டிராவில் 240 புதிய உருமாறிய கொரோனா கிருமிச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.இதுவே, அம்மாநிலத்தில் பதிவாகிஉள்ள அதிகளவு தொற்றுச் சம்பவங்களுக்குக் காரணமாக உள்ளது என்றார் மகாராஷ்டிர கொவிட் பணிக்குழுவைச் சேர்ந்த டாக்டர் ஷஷாங்க் ஜோஷி.
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டு, பின்னர் குணமடைந்து நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்ட ஒரு கூட்டம் உருவாவது, இந்தியாவில் சாத்தியப்படாத ஒன்று. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவுக்குப் பாதுகாப்பு கிடைக்க, குறைந்தது 80% மக்களுக்காவது தங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும் என்றார் டாக்டர் ரண்டீப் குலேரியா. ஆனால், மகாராஷ்டிராவில் காணப்படும் உருமாறிய இந்திய கிருமிக்குத் தொற்றும் ஆற்றலும் அபாயமும் அதிகம் உள்ளது என்றும் அதனால் கிருமி பாதிப்பிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐந்து மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலை தொடங்கிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் கிருமித்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் மற்றொரு பக்கம் புதிதாக நோய்த் தொற்றியோரின் எண்ணிக்கையும் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகளின் அன்றாட எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடக்கவில்லை. இதனால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருந்த வேளையில், நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 14 ஆயிரம் பேர் கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 29ஆம் தேதி நாடு முழுவதும் 18,885 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு தற்போதுதான் அன்றாட தொற்றுச்சம்பவங்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகி உள்ளது.
தற்போது மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில்தான் மீண்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டனர். சட்டீஸ்கரில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
நாடு முழுவதும் கிருமித்தொற்றிலிருந்து 97.27 விழுக்காட்டினர் மீண்டுவிட்ட போதிலும் ஐந்து மாநிலங்களின் தற்போதைய நிலைமை சுகாதார நிபுணர்களுக்கு கவலை அளித்துள்ளது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தலைநகர் மும்பையில் கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு கடந்த இரு தினங்களில் மட்டும் சுமார் ஆயிரம் கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 2 மில்லியனைக் கடந்துள்ளது. புதிய பாதிப்புகள் அதிகரிப்பதால் மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.