மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதிய முழக்கத்துடன் களமிறங்கி உள்ளார்.
‘வங்காளம் தனது சொந்த மகளை விரும்புகிறது’ என்ற அவரது முழக்கம் கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசார வியூகங்களை அமைப்பதில் அரசியல் கட்சிகள் முனைப்பாக உள்ளன.
இந்நிலையில், புதிய பிரசார முழக்கத்தை வெளியிட்டுள்ளது முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி.
“மம்தா பானர்ஜி என்ற ஒரே ஒரு பெயர்தான் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் கிழக்கு முதல் மேற்கு வரையிலும் எதிரொலிக்கிறது,” என்று அக்கட்சித் தலைவர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.
“குரல் அற்றவர்களுக்காக குரல் கொடுக்கும் மம்தா வங்காளத்தை முன்னோக்கி அழைத்துச் செல்வார். அவரால் மட்டுமே இது சாத்தியமாகும். தனது மக்களுக்காக போராடுபவர் மம்தா. அதற்காக அஞ்சாதவர்,” என்று அபிஷேக் மேலும் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலர் அண்மைக்காலமாக பாஜகவில் இணைந்து வருகின்றனர்.
இதனால் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வர் மம்தாவுக்கு கடும் நெருக்கடி நிலவுகிறது.
எனினும் பாஜகவை அவர் கடுமையாக எதிர்த்தும் விமர்சித்தும் வருகிறார்.
அவரை மேற்கு வங்கத்தின் மகளாக சித்திரிக்கும் வகையில் புதிய முழக்கம் அமைந்துள்ளது. இதையடுத்து புதிய சுவரொட்டி, புதிய முழக்கத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தை தீவிரப்படுத்த உள்ளனர்.
இதற்கிடையே அபிஷேக் பானர்ஜி வீட்டில் நேற்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அவருக்கு நிலக்கரி ஊழலில் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக மேற்கு வங்கத்தின் நான்கு மாவட்டங்களில் 13 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாஜக தொடர்ந்து அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.