மத்தியப்பிரதேசத்தின் பொது சுகாதாரத்துறை அமைச்சர் பிரஜேந்திர சிங் யாதவ் தனது கைபேசியில் தொடர்புகொண்ட போது, சரியாகத் தொடர்பு கிடைக்காததால் 50 அடி உயர ராட்டினத்தில் ஏறிப் பேசியுள்ளார்.
இந்தச் சம்பவம் மக்கள் பலரையும் பரபரப்பாகப் பேச வைத்துள்ள நிலையில், “மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகத்தான் ராட்டினத்தில் ஏறி கைபேசியில் பேசினேன்,” என்று விளக்கியுள்ளார் அமைச்சர்.
பாஜக ஆட்சி நடந்து வரும் மத்தியப் பிரதேச மாநிலம், அசோக் நகர் மாவட்டம், அம்கோ கிராமத்தில் ஒரு பொருள்காட்சி நடந்து வருகிறது. அத்துடன் ‘பாகவத கதா’ என்ற பாராயண நிகழ்வும் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், அங்கு அமைக்கப் பட்டிருந்த 50 அடி உயர ராட்டினத்தின் உச்சியில் அமர்ந்து அமைச்சர் கைபேசியில் பேசும் காட்சிகள் பத்திரிகைகளில் வெளியானது. இந்தக் காணொளி சமூக வலைத் தளங்களிலும் வேகமாகப் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர், ‘‘அம்கோ கிராமத்தில் கடந்த ஒன்பது நாள்களாக நான் தங்கியிருந்ததால் அங்குள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் என்னிடம் முறையிட்டனர். அதிகாரிகளிடம் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உத்தரவைப் பிறப்பிக்க கைபேசியில் பேச நினைத்தேன்.
“ஆனால், மலைகளால் சூழப்பட்ட அந்தக் கிராமத்தில் கைபேசி ‘சிக்னல்’ கிடைக்காமல் போனதால் ராட்டினத்தில் ஏறி பேசும்படி ஆகி விட்டது,’’ என்றார்.