அதிக முதியவர்களைக் கொண்ட கேரள மாநிலத்திற்கு கூடுதலான அளவில் தடுப்பூசிகளை வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய சுகாதார அமைச்சருக்கு கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா எழுதியுள்ள கடிதத்தில், நாட்டிலேயே அதிக முதியவர்களைக் கொண்ட மாநிலம் கேரளா என்பதை சுட்டிக்காட்டி, “தடுப்பூசி போடுவதில் மூன்றாவது முன்னுரிமைதாரர்களான 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் இருப்பதால் கூடுதல் தடுப்பூசிகளை வழங்கவேண்டும்,” என கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், ஏற்கெனவே விடுபட்டு போன சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
கேரளாவில் நேற்று முன்தினம் வரை 94% சுகாதாரப் பணியாளர்களுக்கும் 38% முன்களப் பணியாளர்களுக்கும் முதல்முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
23,000க்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாவது முறையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 4,070 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அத்துடன், மேலும் 15 பேர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 58,313 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 9,71,975 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றாததே காரணம் என குற்றஞ்சாட்டி உள்ளனர் சுகாதாரத் துறை அதிகாரிகள்.