ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் ‘கழுதைக் கறி’ பிரபலமடைந்து வருகிறது.
மேற்கு கோதாவரி, பிரகாசம், கிருஷ்ணம், குண்டூர் ஆகிய பகுதிகளிலிருந்து கழுதைகளை இறைச்சிக்காகக் கொல்வது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இறைச்சிக்கான விலங்காக கழுதைகள் வகைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் 2011ன்கீழ், கழுதைகளை இறைச்சிக்காகக் கொல்வது சட்டப்படி குற்றம்.
கழுதைக் கறி சாப்பிடுவதால் உடல் வலுப்பெறுவதாக பலர் கூறுவதைக் கேட்டு, திருட்டுத் தனமாக கழுதைக் கறியை வாங்க ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து பலரும் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்த விற்பனையில் பல கும்பல்கள் சட்டவிரோதமாகச் செயல்படுவதாகவும் ஒரு கழுதையின் விலை 10,000 முதல் 15,000 ரூபாய் எனவும் கூறப்படுகிறது.
ஆந்திராவில் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து கழுதைகள் சட்டவிரோதமாக டிரக்குகளில் ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மும்பையிலிருந்து ஆந்திரப் பிரதேசத்துக்கு கடத்தப்பட இருந்த 8 கழுதைகளை 2013ஆம் ஆண்டில் அதிகாரிகள் மீட்டனர்.
அண்மையில் மேற்கு கோதாவரியில் இறைச்சிக்காக கழுதைகள் கொல்லப்படுவதைப் புகைப்படங்கள் எடுத்த அரசுசாரா அமைப்பின் பிரதிநிதிகள், அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தில் தற்போது கிட்டத்தட்ட 5,000 கழுதைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்படும் நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது, அங்கு இருக்கும் கழுதைகளின் எண்ணிக்கை 60% குறைந்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 1.2 லட்சம் கழுதைகள் மட்டுமே உள்ளன.