கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தை எதிர்கொள்வதில் இந்திய சுகாதாரத் துறை காட்டிய வலிமையை உலகம் அங்கீகரித்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை சுகாதாரத் துறையில் செயல்படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், அத்துறையின் செயல்பாடுகளைப் பாராட்டினார்.
தற்போது இந்திய சுகாதாரத் துறையின் செயல்பாட்டை ஒட்டுமொத்த உலகமும் ஆச்சரியத்துடன் பார்ப்பதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, எதிர்காலத்தில் இந்திய மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்களுக்கான தேவை உலகம் முழுவதும் அதிகரிக்கப் போவதாக கூறினார்.
"கடந்த ஆண்டு ஒட்டுமொத்த உலகமும் சோதனையை எதிர்கொண்டது. எனினும் இந்தப் போராட்டத்தில் இந்தியா வெற்றிகரமாகச் செயல்பட்டது. இதற்கு தனியார் அளித்த பங்களிப்பும் முக்கியமானது.
"எதிர்காலத்தில் வரக்கூடிய நோய்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும் எனும் பாடத்தை கொரோனா கற்றுத் தந்துள்ளது. எனவே சுகாதாரத் துறையின் அனைத்து அம்சங்களையும் வலுப்படுத்துவது முக்கியம்.
"மருத்துவ உபகரணங்கள் முதல் மருந்துகள் வரை, செயற்கை சுவாசக் கருவிகள் முதல் தடுப்பூசிகள் வரை, மருத்துவர்கள் முதல் தொற்றுநோயியல் நிபுணர்கள் வரை என அனைத்து வகையிலும் நாம் தயாராகவும் வலுவாகவும் இருக்க வேண்டும்," என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத்துறைக்கு மிக அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இது எதிர்பாராத ஒன்று என்றார்.
"இந்திய சுகாதாரத்துறை இந்த உலகுக்கு நல்ல உதாரணமாக உருவெடுத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் இந்த உலகம் இந்தியாவைச் சார்ந்திருப்பதற்கான தேவை அதிகரிக்கும். இந்திய மருத்துவக் கல்விக்கான தேவை அதிகரிக்கும் என்பதை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.
"வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிக்க குவியத் தொடங்குவார்கள். அவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டும்," என்றார் பிரதமர் மோடி.

