வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபாலில் வாக்களிப்பதற்கான உரிமையை வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் ஆலோசித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்படலாம் என்று இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஐந்து மாநில தேர்தலில் இது நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபாலில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை தொடுத்த சம்ஷீர் வயலில் நேற்று முன்தினம் தலைமை தேர்தல் ஆணையரைச் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து வெளியுறவு, சட்ட அமைச்சுகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் மட்டும் கேரளாவைச் சேர்ந்த 1.8 மில்லியன் பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் வாக்குரிமைக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தை ஏற்றுக் கொள்வதாகவும் அதன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்று சம்ஷீர் வயலில் கூறியுள்ளார்.
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு அடுத்தடுத்து இந்திய தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை அளிப்பது குறித்து மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.