இந்தியாவில் புதிதாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 86 விழுக்காட்டினர் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களிலேயே உள்ளனர்.
இதையடுத்து தலைநகர் டெல்லியில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த 5 மாநிலங்களில் இருந்து வருவோர், 72 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ‘தொற்று இல்லை’ என்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) முதல் நடப்புக்கு வரும் இக்கட்டுப்பாடு மார்ச் 15 வரை நீடிக்கும் என்று டெல்லி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 110,301,76 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 13,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 104 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 156,567 ஆகி உள்ளது என்று நேற்று காலை அந்நாட்டு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையே மகாராஷ்டிரா, கேரளா, தெலுங்கானாவில் ஆகிய மாநிலங்களில் என்440கே, இ484கே ஆகிய இரு உருமாறிய கொரோனா கிருமிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், பஞ்சாப், கர்நாடகா, ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொள்ளைநோயைக் கையாள்வதில் தேவையான ஆதரவுகளை வழங்க உயர்மட்ட சிறப்புக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.