பன்னிரண்டு வயது மகளை பெற்றோரே 10,000 ரூபாய்க்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் விற்ற சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாவட்டம் கோட்டூரில் 12 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருப்பதாக அறிந்து சமூக நல, மேம்பாட்டு அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று, அவரைத் திருமணம் செய்துகொண்ட 46 வயது சின்ன சுப்பையா என்ற ஆடவரிடமிருந்து சிறுமியை மீட்டனர்.
சிறுமியை மீட்ட சமூக நல, மேம்பாட்டு அதிகாரிகள், குழந்தைத் திருமணம் செய்ததாக சின்ன சுப்பையாவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் போலிசார் நடத்திய விசாரணையில் மேலும் சில பரபரப்புத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுமியின் பெற்றோருக்கு 16 வயதில் மற்றொரு மகள் உள்ளார். அவருக்கு உடல்நலக் குறைவு இருப்பதாகவும் அந்தப் பெண்ணின் சிகிச்சைக்காக சின்ன சுப்பையாவிடம் சிறுமியின் பெற்றோர் சிறிது சிறிதாக கடன் வாங்கியிருந்தனர்.
மேலும் சிகிச்சைக்குப் பணத் தேவை ஏற்பட்டது. அதனை அறிந்த சுப்பையா, இளைய மகளான 12 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும் அதற்கு ஈடாக 10,000 ரூபாய் வழங்க முன்வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
அதற்கு சிறுமியின் பெற்றோர் சம்மதித்ததாக சின்ன சுப்பையா விசாரணையில் தெரிவித்துள்ளார்.
விசாரணை தொடர்கிறது.