வெளிநாட்டிலிருந்து கேரளாவுக்கு வருபவர்களுக்கு இலவசமாக கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும் என்று அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கெ.கெ. சைலஜா தெரிவித்துள்ளார்.
“கேரளாவில் கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. ‘நெகட்டிவ்’ விகிதம் அதிகரித்து வரும் நிலையில் கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதற்கு இணையான எண்ணிக்கைக்கு பதிவு செய்யப்படுகிறது. மீண்டும் கொரோனாவின் தாக்குதல் அதிகரிப்பதை தடுக்க அரசு கவனமுடன் செயல்பட்டு வருகிறது.
“இந்நிலையில், விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனையைத் தவிர்க்க முடியாது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து கேரளா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படும். பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் விரைவில் வழங்கப்படும். வெளிநாடுகளில் பரிசோதனைக்கு பின் மீண்டும் இங்கு பணம் செலவு செய்து கொரோனா பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை தொடர்ந்து, கேரளாவில் கொரோனா பரிசோதனை இலவசமாக்கப்பட்டு உள்ளது.
“மேலும், கேரளாவில் வாகனம் மூலம் நடமாடும் கொரோனா பரிசோதனைக் கூடம் மாநிலம் முழுவதும் தொடங்குகிறது. இந்த பரிசோதனைக்கான கட்டணம் ரூ.448 மட்டுமே. 24 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகளை வழங்காத பரிசோதனைக் கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.