பிரதமர் மோடி: தமிழ் கற்க முயலாததுதான் எனக்குப் பேரிழப்பு

பிரதமர் மோடி: தமிழ் கற்க முயலாததுதான் எனக்குப் பேரிழப்பு

2 mins read
115cb239-041b-4ccc-87d7-c1364a543a8d
படம்: ஊடகம் -

உலகிலேயே மிகவும் பழமையான தமிழ் மொழியைக் கற்க முயற்சி எடுக்காமல் போனதுதான் தன் வாழ்வில் தனக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

திரு மோடி பிரதமராகப் பதவி ஏற்றது முதல் இந்திய மக்களுடன் வானொலியில் பேசி வருகிறார். 'மனதின் குரல்' என்ற அந்த நிகழ்ச்சி மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமை களில் ஒலிபரப்பாகி வருகிறது.

அதில் அப்போதைக்கு அப்போது பிரதமர் தமிழ்மொழியின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறத் தவறு வதில்லை. அந்த நிகழ்ச்சியின் 74வது ஒலிபரப்பு, பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையான நேற்று இடம்பெற்றது.

அகில இந்திய வானொலியில் முற்பகல் 11 மணிக்கு அது ஒலியேறியது. சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒலிபரப்பப்பட்டது.

அதில் பங்கெடுத்துக்கொண்ட நேயர் ஒருவர், 'நீங்கள் முதல்வராக சேவையாற்றி இருக்கிறீர்கள். பிரதமராக தொண்டாற்றி வருகிறீர்கள். உங்கள் வாழ்வில் எதையாவது இழந்துவிட்ட தாக எப்போதாவது நீங்கள் நினைப்பது உண்டா?' என்ற கேள்வியைப் பிரதமரிடம் முன்வைத்தார்.

அதற்குப் பதில் அளித்த திரு மோடி பின்வருமாறு கூறினார்.

"உண்டு. உலகின் ஆகப் பழமையான தமிழ்மொழியைக் கற்காது போனதை நான் இழப்பாகக் கருதுகிறேன்.

"அந்த மொழியைக் கற்க நான் போதிய முயற்சி எடுக்கவில்லை. தமிழ் மொழியைக் கற்க முடியவில்லை.

"தமிழ்மொழி அழகான மொழி. உலகம் முழுவதும் பிரபலமானது. அந்த மொழியின் இலக்கியம், செய்யுளின் தரம் பற்றி பலர் என்னிடம் எடுத்துக்கூறி இருக்கிறார்கள்," என்று தமது பதிலில் திரு மோடி தெரிவித்தார்.

தண்ணீர் சிக்கனம்; வட்டார மொழிகளில் விளையாட்டு வர்ணனைகளை இடம்பெறச் செய்வது; மாணவர்கள் கவலையை விட்டுவிட்டு வெற்றியாளர் மனப்போக்கை வளர்த்துக் கொள்வது; காட்டு வளங்களைப் பாதுகாப்பது முதலானவற்றை தனது உரையில் மோடி வலியுறுத்தினார்.