புதுடெல்லி: ஆறு மாநிலங்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் அன்றாட எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.
அதிக பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 11 ஆயிரம் பேரை கிருமி தொற்றியுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் தீவிர நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் கடந்த மூன்று மாதங்களாக வெகுவாகக் குறைந்துள்ளது.
அன்றாட பாதிப்பு சம்பவங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாக இருந்தது.
இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதி முதல் அன்றாட எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
இதன் எதிரொலியாக மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகத்தில் நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் கிருமித்தொற்றால் 18,599 பேர் புதிதாக பாதிக்கப்பட்டது உறுதியானது.
இவர்களில் 11,141 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் 2,100 பேரும் பஞ்சாப்பில் 1,043 பேரும் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று முன்தினம் பதிவான புதிய நோய்த்தொற்றுச் சம்பவங்களில் 86.25 விழுக்காடு மேற்குறிப்பிட்ட ஆறு மாநிலங்களில்தான் பதிவாகி உள்ளது. எனினும் நேற்று முன்தினம் நாடு முழுவதும் 97 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் இவர்களில் 38 பேர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 18 மாநிலங்களில் உயிரிழப்பு ஏதுமில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த மூன்று மாதங்களாக அன்றாட பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்தது.
இந்நிலையில் திங்கட்கிழமை அங்கு புதிதாக 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

