மம்தா பானர்ஜி: நான்கைந்து பேர் என்னைத் தாக்கினர்

மம்தா பானர்ஜி: நான்கைந்து பேர் என்னைத் தாக்கினர்

2 mins read
5d14e6d3-2a2b-49b3-b97c-6d33e3a71a53
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மம்தா பானர்ஜி. படம்: இந்திய ஊடகம் -

மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் இம்மாதம் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்காக தமது வேட்பு மனுவை ஹல்டியா பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று நேற்று தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மாலையில் பர்பா மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பிரசாரம் மேற்கொள்ள சென்றார்.

அங்குள்ள கோயிலுக்கு வெளியே காரின் அருகே நின்றுகொண்டிருந்தபோது தம்மை நான்கைந்து பேர் தாக்கியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

காலில் காயமடைந்த மம்தாவை பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி காரில் ஏற்றினர். "கார் கதவு அருகே நான் நின்றிருந்தேன். அப்போது நான்கைந்து பேர் என்னை தள்ளிவிட்டு தாக்கினர். என்னைச் சூழ்ந்து கொண்டு கார் கதவை நோக்கி தள்ளிவிட்டனர். கதவில் எனது கால் மோதியது. இதில் காலில் காயம் ஏற்பட்டது" என்று செய்தியாளர்களிடம் மம்தா கூறினார் . தற்போது கோல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மம்தா பானர்ஜி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

"ஆரம்பக்கட்ட மருத்துவப் பரிசோதனையில் மம்தா பானர்ஜியின் இடது கணுக்கால், வலது தோள்பட்டை, முன்கை மற்றும் கழுத்தில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் மார்பு வலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அவர் 48 மணி நேரம் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்" என்று மம்தா பானர்ஜிக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.