மும்பை: பெரும் தொழிலதிபர் ‘ரிலையன்ஸ்’ முகேஷ் அம்பானியின் வீட்டிற்கருகே கடந்த மாதம் வெடிபொருள்களுடன் நின்றிருந்த மர்ம கார் தொடர்பான வழக்கில், காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாசேவை தேசிய புலனாய்வுப் பிரிவு கைது செய்தது.
மும்பையில் உள்ள புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் நேற்று முன்தினம் வாசேவிடம் அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். வரும் 25ஆம் தேதி வரை அவரைப் புலனாய்வுப் பிரிவினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அந்த காரின் உரிமையாளரான மன்சுக் ஹிரேன் கொலை செய்யப்பட்டதை புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
அதன் தொடர்பில் மகாராஷ்டிரா பயங்கரவாதத் தடுப்பு போலிசாரும் வாசேவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மன்சுக்கின் காரை வாசே நான்கு மாதகாலமாகக் கடனாகப் பெற்றிருந்ததாகவும் கடந்த மாதம் 5ஆம் தேதிதான் அதைத் திருப்பித் தந்ததாகவும் கூறப்பட்டது.