புதுடெல்லி: வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கிப் போயின. ஏடிஎம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.
அதன்படி நேற்று அப்போராட்டம் தொடங்கியது. இதில் நாடு முழுவதும் உள்ள ஒன்பது லட்சம் வங்கி ஊழியர்களில் பெரும்பாலானோர் பங்கேற்றதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள 88 ஆயிரம் வங்கிக் கிளைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் மட்டும் 14 ஆயிரம் கிளைகள் மூடப்பட்டதாகவும் இதன் காரணமாக பணம் எடுத்தல், காசோலைப் பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் அடியோடு முடங்கின.
கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் இயங்கவில்லை. இந்நிலையில், இரு நாள்கள் வேலை நிறுத்தமும் நடைபெறுவதால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் வங்கி ஊழியர்கள் பலர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று சாலை மறியலிலும் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 16,500 கோடி மதிப்புள்ள 2 கோடி காசோலைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும் என்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

