புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை சுமார் முப்பது மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சில மாநிலங்களில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவில் நிலைமை மோசமாக உள்ளது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் புதிதாக 26,291 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 118 பேர் உயிரிழந்துவிட்டனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரே நாளில் சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலைமை மோசமடைந்து வருவதால், நாக்பூரில் நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் அலட்சியப் போக்குடன் இருந்தால் மாநிலம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த நேரிடும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2.3 மில்லியனைக் கடந்துள்ளது. அங்கு இதுவரை 52,861 பேர் கிருமித்தொற்றால் பலியாகியுள்ளனர்.
நாக்பூர் நகரில் ஊரடங்கு அமலாகி இருப்பதையடுத்து அங்கு நேற்று மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன.
இதற்கிடையே கர்நாடகாவிலும் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள், சுகாதார நிபுணர்களுடன் முதல்வர் எடியூரப்பா நேற்று தீவிர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவர் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் எண்ணிக்கை சுமார் 30 மில்லியனை நெருங்கியுள்ளது.
முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள வீரர்களுக்கு கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அரசு, தனியார் சுகாதார மையங்களில் அமைக்கப்பட்ட தடுப்பூசி முகாம்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

