திருவனந்தபுரம்: பாஜகவில் உறுப்பினராக கூட இல்லாத ஒருவரை அக்கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்த வேடிக்கை கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து வேட்பாளர் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது.
வயநாடு மாவட்டம், மானந்தவாடி தொகுதியில் மணிகண்டன் என்கிற மணிகுட்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் தமக்கு இந்த விவரம் தெரியாது என்றும் தேர்தலில் போட்டியிடும் விருப்பம் தமக்கு அறவே இல்லை என்றும் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
"தொலைக்காட்சியில் பார்த்துத்தான் என்னை வேட்பாளராக அறிவித்ததை தெரிந்து கொண்டேன்.
"எனது கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை செய்து, குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வதையே விரும்புகிறேன்.
"நான் பாஜக அனுதாபி அல்ல. எனவேதான் அக்கட்சியின் அறிவிப்பை மகிழ்ச்சியோடு நிராகரித்தேன்," என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

