புதுடெல்லி: சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி முறை போடப்படக்கூடிய கொரோனா தடுப்பு ஊசியை வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வாங்கி வருகிறது.
இந்த இரு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் தடுப்பூசிகளை இந்தியா முழுவதும் மத்திய அரசு அனுப்பி மக்களுக்கு செலுத்திவருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்தியா முழுவதும் மூன்றரைக் கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நாளுக்கு நாள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதனால் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான கொள்முதல் ஆணையை அனுப்பி உள்ளது.
ஆஸ்ட்ராஸெனகாவும் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகமும் சேர்ந்து உருவாக்கிய கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தை உலகின் ஆகப் பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் தயாரித்து உள்ளது. ஒரு முறை போட்டுக்கொள்ளக்கூடிய கொவிஷீல்ட் தடுப்பூசி மருந்தின் விலையை இதற்கு முன்னர் 210 ரூபாயாக நிர்ணயித்திருந்த சீரம் நிறுவனம் பின்னர் அதனை ரூ.157.50க்கு குறைத்தது.
புதிதாக வாங்கத் திட்டமிடப்பட்டு உள்ள பத்து கோடி தடுப்பூசிக்கும் ஆகும் செலவை மத்திய சுகாதார அமைச்சு ஏற்கிறது.
இதற்கென வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் வரை தடுப்பூசிக்கான செலவை பிரதமரின் பராமரிப்பு நிதி ஏற்றுக்கொண்டதாக தகவல் ஒன்று தெரிவித்தது.

