புதுடெல்லி: இந்தியாவிலுள்ள பெண்கள் 20 வாரம் வரை வளர்ந்த கருவை கலைத்துக்கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. அதேசமயம், பல்வேறு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சூழல்களால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் ஆகியோரின் நலன்களை முன்னிறுத்தி, கருக்கலைப்பு காலத்தை 24 வாரங்களாக அதிகரித்து சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என சமூக நலன் சார்ந்த அமைப்புகளும் பெண்ணிய அமைப்புகளும் மத்திய அரசுக்கு நீண்ட காலமாகவே கோரிக்கை வைத்தபடி இருந்தன.
அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சு கடந்த ஆண்டு இதற்கான சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்தது. அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சூழலில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையிலும் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதிபரின் ஒப்புதலைப் பெற்ற பின்னர் சட்டத்திருத்தம் அமலுக்கு வரும். அதன் பின்னர், 24 வாரகால கருவைக் கலைக்க பெண்களுக்கு அனுமதி கிடைக்கும். இதற்கிடையே இந்தச் சட்டத் திருத்தம் குறித்த எதிர்மறை விமர்சனங்களும் எதிரொலிக்கத் துவங்கியுள்ளன.

