ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆந்திர மாநில பிரிவினைக்குப் பிறகு 2015ஆம் ஆண்டு அமராவதியில் புதிய தலைநகரம் அமைக்க முந்தைய தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி முயற்சி எடுத்தது.
அப்போது, விவசாயிகளிடம் இருந்து முறைகேடாக நிலம் பெறப்பட்டதாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி புகார் அளித்தார்.
"அரசுத் தரப்பில் சிலர் விவசாயிகளிடம் பொய் வாக்குறுதி தந்து அவர்களுக்கு எந்தவிதமான இழப்பீட்டுத் தொகையும் தராமல் விவசாய நிலங்களை வாங்கி மோசடி செய்துள்ளனர்," என அவர் அந்தப் புகாரில் கூறியிருந்தார்.
இதன் தொடர்பாக கடந்த 12ஆம் தேதி மாநில குற்றப்பிரிவு போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நில முறைகேடு தொடர்பாக விஜயவாடாவிலுள்ள சிஐடி அலுவலகத்தில் வரும் 23ஆம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடுவுக்கு சிஐடி போலிசார் நோட்டீஸ் கொடுத்தனர். அவரது வீட்டில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

